அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: அதிர்ந்து போன ஊழியர்கள்!
Nov 12, 2020, 16:18 IST1605178091000
அரியலூர் தோட்டக்கலைத்துறை அரசு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணியாற்றி வந்த இணை இயக்குனர் அன்பு ராஜன் என்பவரிடம் இருந்து ரூ.42,000 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கிருந்து பெண் உதவியாளரிடம் இருந்து ரூ.19,500 பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கீழப்பழுவூர் பகுதியில் இருக்கும் பண்ணை அலுவலகத்துக்கு விரைந்த போலீசார், சுற்று சுவர் ஏறி உள்ளே குதித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த ரவிசங்கர் என்ற நபரிடம் இருந்து ரூ.44,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.1,05,500 கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.