விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

 

விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகள் திருடர்களா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியிலும் உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள், தங்கள் பகுதியில் போர் அல்லது கிணறு அமைத்து, மின்சார பம்ப்செட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், அனுமதி இல்லாமல் ஆற்றுநீர் திருடப்படுவதாகக் கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை 8ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ” தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதி இல்லாமல் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும்” குற்றம்சாட்டினார். விளைச்சல் இல்லாமல் மன உளைச்சலில் சிரமப்படும் விவசாயிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக திருடர்கள் என்று நா கூசாமல் கூறுவது கண்டிக்கத்தக்கது.

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியமைச்சர், ‘திருடர்கள்’ பட்டம் கொடுத்துள்ளார். விவசாயிகள் நீரை எடுத்து சென்று உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்; குளிர்பானம் தயாரிப்பு, அல்லது குடிநீர் புட்டிகள் தயாரிப்புத் தொழிலுக்கு பயன்படுத்தவில்லை.

விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

விவசாயிகள் தங்கள் வயலில் இருக்கும் கிணறு, போர்வெல்லிருந்து தண்ணீரை குழாய் மூலம் தொலைவில் உள்ள தங்களுடைய தோட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாது என நிதி அமைச்சர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ஆற்றில், வாய்க்கால் இருந்து முறைகேடாக எடுத்தவர் மட்டும் பொருந்துமா அல்லது இதுவரை தண்ணீர் பைப் லைன் மூலம் விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து கொண்டு இருந்தாலும் கூட இனிமேல் அப்படி எடுத்துக் செல்ல முடியாமா என்பது அதிகாரிகளுக்கே விளங்கவில்லை.ஆகவே தமிழக நிதி அமைச்சரின் தடாலடி உத்தரவினால் வயல், ஆற்றுக்கு, வாய்க்கால் அருகில் இருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் அனைத்து விவசாயிகளும் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக விவசாயிகளையும் விவசாய உற்பத்தி பொருள்களையும் பாதிக்கும் நிதியமைச்சரின் நடவடிக்கையை முதல்வர் தடுத்து நிறுத்தி, ஏழை விவசாயிகளின், அடிப்படை வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீர் ஆதாரம் வேண்டும்’ என்று தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.