தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு பலம் உள்ளது: அண்ணாமலை

 

தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு பலம் உள்ளது: அண்ணாமலை

திருச்சி வயலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் திருச்சிக்கு வந்தார். மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, “அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் நேரம் இதுவல்ல. கூட்டணியில் போட்டியிடுவதா தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். திராவிட கட்சிகளில் திமுக குடும்ப அரசியல் உட்பட எல்லா விஷயங்களிலும் மித மிஞ்சி இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு பலம் உள்ளது: அண்ணாமலை

பாஜக என்பது அதிமுக கூட்டணியுடன் இருக்கிறது. புதுக் கூட்டணி தேவை என்பது குறித்து பேச்சுக்கு தற்போது இடமில்லை. கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை எடுக்கும்.அதிமுக கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் நடக்கும்போது மத்திய அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்திரபிரதேச சம்பவத்தில் உடனடியாக 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்ற நாடுகளையும், மற்ற நாடுகளின் தலைநகரை காட்டிலும் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எப்போதாவது நடைபெறும் பிரச்சினையை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. தேர்தல் கூட்டணி குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கொள்கையை ரீதியாகவே அதிமுகவும் பாஜகவும் இணைந்து தற்போது பயணம் செய்து கொண்டிருக்கிறது. வேளாண்மை திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதை பார்க்க முடிகிறது.

தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. தனித்துப் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு பலம் இல்லாமல் இல்லை. எழுபத்தி ஐந்தாயிரம் பூத்துகளிலும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தனித்துப் போட்டியிடுவதா? அல்லது கொள்கைகளுடன் சேர்ந்து போகிற கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பா.ஜ.க யின் தலைமை முடிவு செய்யும்” எனக் கூறினார்.