மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்… பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!

 

மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்… பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!

நாமக்கல்

நாமக்கல் அருகே மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரத்தில் 3 மாத குழந்தையை சுவரில் மோதி கொலை செய்த தாயை போலீசார் கைதுசெய்தனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி கஸ்தூரி(27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமடைந்த கஸ்தூரிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சில நாட்களிலேயே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல், அங்கிருந்து கஸ்தூரி குழந்தையுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரிய வந்தது. இதனால், அவரை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், திடீரென குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறிய கஸ்தூரி, அதிகாரிகள் நேரில் விசாரித்தபோது குழந்தையை புதைத்து விட்டதாக கூறி உள்ளார்.

மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்… பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்!

கஸ்தூரி மீது சந்தேகமடைந்த எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், எருமப்பட்டி போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், குழந்தை அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை அடுத்து, நேற்று முன்தினம் கஸ்தூரியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரத்தில் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை சுவரில் வேகமாக இடித்து கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டார். இதனை அடுத்து, கஸ்தூரியை கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.