கேட்ட சரக்கு கிடைக்காததால் ஆத்திரம்… டாஸ்மாக் ஊழியர் மண்டையை உடைத்த போதை ஆசாமி…
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கேட்ட மதுபானம் கிடைக்காத ஆத்திரத்தில், போதை ஆசாமி டாஸ்மாக் ஊழியரின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகராசன்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கலரபதி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை மதுவாங்குவதற்காக கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் எம்.சி. ரம் மதுபானம் உள்ளதா? என கேட்டுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட அந்த மதுபானம் தீர்ந்து விட்டதாக பழனி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் விற்பனையாளர் பழனியை திட்டியுள்ளார். மேலும், குறிப்பிட்ட மதுபானம் இல்லாததை குறிப்பிட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
டாஸ்மாக்கில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்ற நிலையில் ஆத்திரம் தாங்காத அந்த நபர் அருகில் இருந்த முருங்கை கட்டையை எடுத்து பழனியை சராமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் தலையில் காயமடைந்த பழனி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இதுகுறித்து பழனி அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.