வாய்த்தகராறில் அங்கன்வாடி சமையலர் கல்லால் தாக்கி கொலை!

 

வாய்த்தகராறில் அங்கன்வாடி சமையலர் கல்லால் தாக்கி கொலை!

விருதுநகர்

திருச்சுழி அருகே வாய்த்தகராறில் அங்கன்வாடி பெண் சமையலரை கல்லால் அடித்துக்கொன்ற, பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்த பூலாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (45). இவர் கீழ பூலாங்கால் அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணி புரிந்து வந்தார். இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது, சரோஜாவுக்கும், அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த அன்னம்மாள் (51) என்பவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு உள்ளது.

வாய்த்தகராறில் அங்கன்வாடி சமையலர் கல்லால் தாக்கி கொலை!

இதனால் இருவரும், ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொண்டுள்ளனர். பின்னர், அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து, வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் இருவரும் வீட்டிற்கு சென்ற நிலையில் சரோஜா, அன்னம்மாளின் வீட்டிற்குச் சென்று மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அன்னம்மாள் அருகில் கிடந்த கருங்கல்லை கொண்டு சரோஜாவின் மீது சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த சரோஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பரளச்சி போலீசார், சரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து அன்னம்மாளை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.