மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
ஆந்திரா
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று அதிகாலை மலைப்பாதையில் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் தாட்டிகொண்டா மலையில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில்
நேற்றிரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 30 பேர், வேன் மூலம் கோக்கவரத்திற்கு திரும்பி சென்றுள்ளனர். இன்று அதிகாலை மலைப்பாதை வழியாக சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன், பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ராஜமகேந்திரவரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.