கார் விபத்தில் 5 தமிழர்கள் பலியானதில், செம்மர அபகரிப்பு கும்பலுக்கு தொடர்பு
ஆந்திரா
ஆந்திராவில் செம்மரங்களை கடத்திச்சென்றபோது விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்ததில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தில், செம்மர அபகரிப்பு கும்பலுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை கடத்திச்சென்ற கார் ஒன்று, டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய காருக்கு பைலட் காராக வந்த மற்றொரு காரும், டிப்பர் லாரி மீது அதிவேகமாக மோதியது.
இதில், டிப்பர் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ பற்றியதில் 3 வாகனங்களும் தீயில் எரிந்தன. இந்த விபத்தில் காரில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 5 செம்மரக்கடத்தல் கூலித் தொழிலாளர்கள் உடல்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த ஆந்திர போலீசார் விபத்து நடந்தது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பெங்களூரை சேர்ந்த பாஷா பாய் என்பவர் தலைமையில் செயல்படும் செம்மர அபகரிப்பு கூட்டம், கடப்பாவில் விபத்து ஏற்பட்ட நாளன்று தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களிடம் இருந்து காருடன் செம்மரங்களை அபகரித்துச் செல்ல முயன்றுள்ளது. அவர்களிடம் இருந்து தப்புவதற்காக கார்களை வேகமாக ஓட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு 5 பேர் மரணம் அடைந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.