வீட்டில் தூங்கிய முதியவர் எரித்துக் கொலை… திருப்பூர் அருகே பயங்கரம்!

 

வீட்டில் தூங்கிய முதியவர் எரித்துக் கொலை… திருப்பூர் அருகே பயங்கரம்!

திருப்பூர்

திருப்பூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, அவரது மகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமாராசாமி (88). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் சிலர் குமாரசாமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார். இதில், உடலில் தீப்பற்றியதால் அலறி துடித்த குமாரசாமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டில் தூங்கிய முதியவர் எரித்துக் கொலை… திருப்பூர் அருகே பயங்கரம்!

இறப்புக்கு முன்பாக அவர் அளித்த மரண வாக்குமூலம் அடிப்படையில், மங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த குமாரசாமிக்கும், அவரது மகன் மாரப்பனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், குமாரசாமியின் பெயரில் உள்ள 4 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு மாரப்பன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், குமாரசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால், சொத்து தகராறில் மாரப்பன் தீவைத்து எரித்தாரா? அல்லது வேறு யாரும் சதி வேலையில் ஈடுபட்டனரா? என மாரப்பனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கிய முதியவர் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.