ரூ. 2,000 கோடி 'ரியல் எஸ்டேட்' மோசடி- அறப்போர் இயக்கம் அதிர்ச்சி புகார்..!
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:
"சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில், பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் (Brigade Morgan Heights) என்னும் தனியார் நிறுவனம், 1,250 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.
சதுப்பு நிலப் பாதுகாப்பு ஒப்பந்தம் (ராம்சார் ஒப்பந்தம்) மற்றும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, ராம்சார் நிலங்களில் எந்தவொரு கட்டுமானத்துக்கும் அனுமதி கொடுக்க முடியாது. அந்த நிலங்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கடமை.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2022 ஏப்ரல் 8-ம் தேதி 3,080 ஏக்கர் அளவிற்கு ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. இதில் 1,375 ஏக்கரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களை மீட்க வேண்டியது அரசின் கடமை.
ராம்சார் பகுதிக்கு உட்பட்ட சர்வே எண்கள் 453, 495, 496, 497, 498-ல் உள்ள கிட்டத்தட்ட 14.7 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியும், கட்டுமான அனுமதியும் கோரியுள்ளது.
"ராம்சார் நிலத்தில் இது பதிவான பிறகும், பிரிகேட் நிறுவனம் 2022 ஜூலையில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பாகக் குறிப்பு விதிமுறைகள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்கிறது.
குறிப்பிட்ட இந்த இடம் ராம்சார் நிலத்திற்கு 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக வனத்துறை பொய் சொல்கிறது.
மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, ஜனவரி 20, 2025 அன்று மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தை வழங்குகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (CMDA) மின்னல் வேகத்தில் கட்டுமான அனுமதியை வழங்கியுள்ளது. சி.எம்.டி.ஏ இந்த நிலத்தை சரிபார்க்காமல் அவசரமாக அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்தச் சட்டவிரோத அனுமதியால், அந்தப் பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை இந்தத் துறைகள் செய்துள்ளன.
₹100 கோடி லஞ்சம்? நீதிமன்றத்தை நாடுவோம்!
இந்தச் சட்டவிரோத அனுமதியில் எத்தனை கோடி ரூபாய் கைமாறியது? ₹100 கோடிக்கு மேலாக லஞ்சமாகக் கைமாறியுள்ளதாகத் தெரியவருகிறது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர்.
எனவே, அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அந்த நிலத்தை மீட்க வேண்டும். அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் வீடுகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். பெரும் வெள்ளத்துக்குப் பிறகு நிலங்களைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இல்லையெனில், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்," என ஜெயராம் வெங்கடேசன் கூறினார்.