இன்று 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. எச்சரிக்கையாக இருங்க மக்களே..!!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களில் அதிகனமழையும், 19 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( 15 -ஆம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த 3 தினங்களில் விலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16 - 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் எனவும், இதனால் வட தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று, ( அக்.15) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று , திருவாரூர், நாகப்பட்டினம், மயிவாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.