என்ன நடந்தாலும் சரி....நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண மாட்டேன் - மாதம்பட்டி ரங்கராஜ்..!
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கூறி வருகிறார். இதனை மாதம்பட்டி ரங்கராஜ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பான விசாரணைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அவ்வப்போது ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜை தாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வருவதோடு, ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார்.
இப்படியான சூழலில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையை தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும் சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையை தீர்க்க நான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன்.
இந்த பிரச்சனை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையம் வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி'' என்று கூறியுள்ளார்.