ஓசூரில் பல அடி உயரத்திற்கு பொங்கிவரும் நுரை- போக்குவரத்து துண்டிப்பு
ஓசூர் அருகே அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை தரைப்பாலத்தை மூழ்கடித்ததால் அகற்ற முடியாமல் தீயணைப்பு துறை திரும்பியதை தொடர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து 4700 அதிகரித்து வருகிறது, அனை முழு கொள் அளவான 44.28 கன அடி உள்ள நிலையில் 42.64 நீர் தேக்கபட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியாக விநாடிக்கு தற்போது 4000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் ஒசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் நீரில் முழுமையாக மூழ்கி தரைப்பாலத்தின் மீது 30 அடி உயரத்திற்கு மேலாக ரசாயன நுரைகள் பொங்கிய நிலையில் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக தட்டனப்பள்ளி, நந்திமங்கலம் சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் துண்டிக்கப்பட்டிருப்பதால் 15 கிமீ தூரம் சுற்றிதான் ஓசூருக்கு வர வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது. மாலை வரை தரைப்பாலத்தின் மீது தேங்கி உள்ள நுரையை தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சிஅகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் மேலும் அதிகப்படியான நுரையானது சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் உள்ளதால் அவர்களால் நுரையை வெளியேற்ற முடியாமல் திருப்பிச் சென்றனர். இதன் காரணமாக போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டு அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தெரிவிக்கையில், “நுரையை காரணமாக நாங்கள் சுமார் பத்து பதினைந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது காலையில் வேலைக்கு செல்ல முடியாமல் திரும்பி வேறு வழியாக சென்றோம் தற்போது அகற்றப்பட்டிருக்கும் என்று இந்த பாதையில் மீண்டும் வந்தோம் ஆனால் இதுவரை பாதை சரி செய்யப்படவில்லை எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாதையில் உள்ள நுரையை வெளியேற்றி போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.