×

“ஓபிஎஸ் கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன்”- மனோஜ் பாண்டியன்

 

ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று தனது பதவியை முறைப்படி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.இந்த நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார்.சபாநாயகர்,மனோஜ் பாண்டியனின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அப்போது அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், “2021 ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தேன். அதை பேரவை தலைவர் ஏற்றுக் கொண்டார். என்னுடைய தொகுதி மக்களை பொருத்தவரையில், கடந்த 4 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்காக நான் பேச முற்பட்ட போதெல்லாம், எனக்கு வாய்ப்பு தரக்கூடாது என்று சொல்லி எதிர்க்கட்சித் தலைவரும் அங்கு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும், பல முறையை வாய்ப்பை தடுத்தார்கள். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு வாய்ப்பு தரலாம் என்று சொல்லி. பல நேரங்களில் மக்களின் கோரிக்கைகளை நான் சட்டப்பேரவையில் வைத்து, அதன் அடிப்படையில் நான் குரல் கொடுத்தேன். நான் குரல் கொடுத்த கோரிக்கைகள் நான் வைத்த அனைத்து கோரிக்கைகளும், என்னுடைய ஆலங்குளம் தொகுதியில் ஏறக்குறைய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேர்வதற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய முடிவை நான் அவரிடம் தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. என் மீதும் அவர் மரியாதை கொண்டவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால், ஒரு அரசியல் இயக்கம் தேவை. அந்த இயக்கம் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இயக்கம் திராவிட கொள்கைகளை பாதுகாக்க கூடிய இயக்கம் திமுக என்று சிந்தித்துதான் இந்த முடிவை எடுத்தேன்” என்றார்.

ஓபிஎஸ் ஒரு முடிவு எடுக்கிறார் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று... அது தோல்வி அடையும் என்பதை நீங்கள் கணித்ததால் தான் அங்கிருந்து வெளியே வந்தீர்களா என்ற கேள்விக்கு? பதிலளித்த மனோஜ் பாண்டியன், அதிமுக தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கமாகவும் ஜெயலலிதா வளர்த்தெடுத்த இயக்கமாகவும் இல்லை. அந்த இயக்கம் ஒருங்கிணையாதற்கு காரணம், தற்போது அதிமுக, மத்திய பிஜேபியின் கிளைக் கழகமாக இங்கு செயல்பட்டு வருகிறது. அதிமுக எடப்பாடி அதிமுகவாக உள்ளது என்று  குற்றம்சாட்டினர். மீண்டும் ஆலங்குளத்தில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும் என்று மனோஜ் பாண்டியன் கூறினார்.