பனையூர் தவெக அலுவலகத்தில் விசாரிக்க சிபிஐ திட்டம்?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் அப்பகுதியில் வணிகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஜவுளிக்கடை உரிமையாளர், செல்போன் கடை உரிமையாளர், மெக்கானிக் ஷாப் உரிமையாளர், கறிக்கடை உரிமையாளர் என 10 பேர் தற்பொழுது சம்மனுக்கு சுற்றுலா மாளிகையில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் நாளை பனையூர் தவெக அலுவலகத்தில் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.