×

நாட்டு வெடி வெடித்து பட்டாசு வாங்க வந்த 4 பேர் பலி!

 

ஆவடி அருகே பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக  வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

சென்னை பட்டாபிராம் தண்டுரை, விவசாயி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (51).பூ வியாபாரியான  இவருக்கு ஹேமலதா(28) என்ற  மகளும், விஜய்(25),அஜய் (23) என்ற இருமகன்கள் உள்ளனர். இதில்  விஜய் மட்டும் ஆறுமுகத்துடன் வீட்டில்  தங்கி ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்விற்கு வெடிக்கப்படும் நாட்டு வெடி  பட்டாசுகள் விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகள் திடிரென வெடித்து சிதறியது. பலத்த சத்தத்துடன் வெடித்தததில் வீடு இடிந்து விழுந்தது. மேலும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினரை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அனைத்த பின்னர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில்  இரண்டு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நீண்ட போரட்டத்திற்கு பின்பு உள்ளே இடிபாடுகளில் சிக்கிய  மேலும் இரண்டு உடல்களை மீட்டனர். விசாரணையில் தீபாவளி பண்டிகைக்காக நாட்டு வெடி பட்டாசு வாங்க வந்த திருநின்றவூரை சேர்ந்த யாசின்(25) மற்றும் சுனில் பிரகாஷ்(23)ஆகியோர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மீட்கப்பட்ட இரு உடல்களின் அடையாளம் காணப்படவில்லை தொடர்ந்து இடிபாடுகளில் வேறு எவரேனும் சிக்கி உயிரிழந்த உள்ளார்களா என்பதை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி கண்டரிந்தனர். 

அதே போல் உயிரிழந்த நான்கு பேரில் இரண்டு ஊடல்கள் அடையாளம் கண்ட நிலையில் மீதமுள்ள இரண்டு உடல்களில் ஆணா பெண்ணா என்பதை தெரியாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நான்கு உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடல் கூறு ஆய்விற்காக கே எம் சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட விஜய் வெடி மருந்துகளை வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து பட்டாசு தயாரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்டாசுகளை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. வீட்டில்  ஏறக்குறைய 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள்  இருந்ததாக கூறப்படுகிறது. அதே போல் வெடி மருந்துகளும் இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்து குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். அதேபோல் விஜய் உண்மையில் திருவிழா மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே நாட்டு வெடி  தயார் செய்து வந்தாரா அல்லது சட்ட விரோத செயலில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் எந்த ஒரு உரிமமும் இல்லாமல் சட்ட விரோதமாக விஜய் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட விஜய் விபத்தில் சிக்கி உயிர் இழந்தாரா அல்லது தப்பி ஓடினாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வெடி விபத்து காரணமாக தண்டரை பகுதி பெரும் பதட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.