கொரோனா பாதித்த பெண்ணை அழைத்துச்செல்லும் வழியில் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கொரோனா பாதித்த 18 வயது இளம்பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆம்புலன்ஸிலேயே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொடூரத்திற்குப்பின், கொரோனா ஆம்புலன்ஸ்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இரவு 7 மணிக்கு மேல் நோய் பாதித்த பெண்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரம் என்றால் சுகாதாரத்துறையில் பதிவு செய்துவிட்டு, சுகாதாரத்துறை பணியாளர் ஒருவரையும் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.