ஈரோட்டில் அரசு நிலத்தை சீரமைக்க கோரி மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

 

ஈரோட்டில் அரசு நிலத்தை சீரமைக்க கோரி மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்தை சீரமைத்து தரக் கோரி, மாற்றுத்திறனாளிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. ஆனால் இடம் பாறை, கரடு முரடாக இருப்பதால் சமன் செய்து தரக்கோரி, கடந்த நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் நல்ல கவுண்டன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் பெயரளவிற்கு அந்த இடத்தை சீரமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலத்தை முறையாக அளவீடு செய்து சமன்செய்து தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் அரசு நிலத்தை சீரமைக்க கோரி மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

இரவில் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் பரிமளாதேவி, குறிப்பிட்ட இடத்தை சமன்செய்ய 15 லட்சம் வரை செலவாகும் என்றும், அதனை சீரமைக்க கால அவகாசம் வேண்டும் எனவும் கூறினார். ஆனால் அதிகாரிகள் பணிகளை தொடங்கி முடிக்கும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி இரவு முழுவதும் கடும் குளிரில் விடிய விடிய போராட்ட களத்தில் இருந்தனர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.