அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த கண்ணனுக்கு முதல் பரிசு

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த கண்ணனுக்கு முதல் பரிசு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கிராமத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லக்கட்டு இன்று காலை தொடங்கியது. இதனை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை பக்குவமாக அடக்க, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா முதல் தங்கக் காசுகள் வரை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப் பாய்ந்துச் சென்றது என்றே தான் சொல்ல வேண்டும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த கண்ணனுக்கு முதல் பரிசு

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுடன் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. போட்டியின் முடிவில், 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. கருப்பணன் என்பவர் 9 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்தை பிடித்தார். அவருக்கு 2 நாட்டு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அலங்காநல்லூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் 8 காளைகளை பிடித்தார். அவருக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த காளைகளாக குருவித்துறையை சேர்ந்த சந்தோஷின் காளைக்கு கார் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாமிடம் பிடித்த வழக்கறிஞர் அருண் என்பவரின் காளைக்கு பைக்கும் வழங்கப்பட்டது.