விமானிக்கு கொரோனா உறுதி…டெல்லி – மாஸ்கோ விமானம் பாதி வழியில் திரும்பியது

 

விமானிக்கு கொரோனா உறுதி…டெல்லி – மாஸ்கோ விமானம் பாதி வழியில் திரும்பியது

டெல்லி: விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் டெல்லி – மாஸ்கோ விமானம் பாதி வழியில் திரும்பியது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 71,410 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றால் நாட்டில் 4797 பேர் இறந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தரைக் கட்டுப்பாட்டு அணிக்கு தகவல் கிடைத்தது. இதனால் டெல்லி – மாஸ்கோ விமானம் பாதி வழியிலேயே மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.