சொத்து தகராறில் சொந்த அண்ணனை கடத்திச் சென்ற அதிமுக பெண் நிர்வாகி!

 

சொத்து தகராறில் சொந்த அண்ணனை கடத்திச் சென்ற அதிமுக பெண் நிர்வாகி!

சொத்து தகராறில் சொந்த அண்ணனை கடத்திச் சென்ற அ.தி.மு.க பெண் பிரமுகர், கல்லூரி மாணவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் சொந்த அண்ணனை கடத்திச் சென்ற அதிமுக பெண் நிர்வாகி!

சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் (50). தனது தாய்க்கு சொந்தமான வீட்டில் பெற்றோர் தரைத்தளத்தில் வசித்து வரும் நிலையில், புருஷோத்தமன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். புருஷோத்தமனுக்கும் அவரது தங்கையும், அ.தி.மு.க கொளத்தூர் பகுதி 68 வது வட்ட செயலாளருமான வட்சலா(46) என்பவரும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கை வட்சலா தனது அண்ணனுக்கு தெரியாமல் அவர் வசிக்கும் வீட்டில் காலியாக உள்ள அறைக்கு தனக்கு தெரிந்த நபரை வாடகைக்கு குடியமர்த்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த நபரை அங்கிருந்து அனுப்பிவிட்டு வட்சலா தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறினார். இதனால் தனது தங்கையை வீட்டை விட்டு காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து புருஷோத்தமன் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடந்த 5ஆம் தேதி புருஷோத்தமன் வேப்பேரி ரித்திடன் சாலை சந்திப்பில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வந்த அவரது தங்கை வட்சலா மற்றும் அவரது குடும்பத்தினர் புருஷோத்தமனை அடித்து உதைத்து, அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதி அருகே கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த புருஷோத்தமன், நேற்று இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்துத் தகராறில் புருஷோத்தமனை அவரது தங்கையே காரில் கடத்தி சென்றது உறுதியான நிலையில் வட்சலா மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் லோகநாதன் (50), கடல்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மகன் ஜெயராம்(21) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மற்றோரு மகன் ருத்ரன்(21) உட்பட 4 பேரை வேப்பேரி போலீசார் கைது செய்ததுடன் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.