ஊழல் காரணமாக முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தமிழகத்துக்கு அவமானம் தேடித்தந்த இயக்கம் அ.தி.மு.க! – கே.கே.எஸ்.எஸ்.ஆர் கண்டனம்
ஊழல் காரணமாக முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தமிழகத்துக்கு அவமானம் தேடித்தந்த இயக்கம் அ.தி.மு.க! – கே.கே.எஸ்.எஸ்.ஆர் கண்டனம்
ஊழல் வழக்கு காரணமாக தண்டனை பெற்று, முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டு தமிழகத்துக்கு அவமானம் தேடித்தந்த இயக்கம் அ.தி.மு.க என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.
தி.மு.க-வை விமர்சித்து அறிக்கை, பேட்டி அளித்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை உயிர்ப்பறிப்பு கொடூரத்துக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமிருந்து கண்டனம் வெளிப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் சமூக வலைதளங்களில் காணொலியாகத் தங்களின் எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார்கள். காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளேகூட, இந்தக் கொடூரத்தை அனுமதிக்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
‘கொரோனா பரப்பி’ எடப்பாடி பழனிசாமி அரசு, இந்த ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைப்பது தங்களின் ‘கொள்கை முடிவு’ என உச்சநீதிமன்றம்வரை சென்று, அந்தக் கொள்கையின் காரணமாக, 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மக்களுக்கு கொரோனாவைப் பரப்பி, ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்திருக்கிற நிலையில், தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடை திறந்து வைத்த அப்பாவையும் மகனையும் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து மரணத்தில் தள்ளிய காவல் துறையினரைக் காப்பாற்றுவதற்கு இன்றளவும் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறது.
அதனைத் திசைதிருப்புவதற்காக, தற்காலிகமாக மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க. அரசு ‘அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்துகொண்டு ஆட்சி செய்வதுபோல’, நீதிமன்றம் பாராட்டிவிட்டது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை மேற்கொண்டிருக்கிறார்.
ஒரு வழக்கின் ஆரம்பத்தில் முழு உண்மையும் தெரிந்துவிடாது என்று முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டிருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது அறிக்கையிலேயே தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
முழு உண்மையும் தெரியாத நிலையில், அப்பா – மகன் இருவரில் ஒருவர் நெஞ்சுவலியால் இறந்தார் என்றும், இன்னொருவர் மூச்சுத்திணறி இறந்தார் என்றும் முதலமைச்சரே முடிவு செய்து அறிக்கை வெளியிட்டது எப்படி? காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் லட்சணம் இதுதானா? முதலமைச்சரின் லட்சணமே இதுதான் என்றால், அவரிடம் நத்திப் பிழைக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் லட்சணம் எப்படி இருக்கும்?
வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் முழு உண்மை தெரியாது என்கிறபோது, உங்களைப் போலவே உளறிக்கொட்டும் இன்னொரு அமைச்சரான கடம்பூர் ராஜூ, “இது லாக்கப் மரணமில்லை” என்று தன் ‘முடிவை’ அறிவித்தது எப்படி? ஆணவமா? அல்லது அமைச்சரவையில் உள்ள அத்தனை பேருமே உங்களைப் போன்ற அரைவேக்காடுகளா?
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தன்னிச்சையாக விசாரித்து உத்தரவிட்டதன் பேரிலேயே தற்போதைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் குரல் கொடுப்பது உங்களுக்கு அரசியலாகத் தெரிகிறது என்றால், உங்கள் அரசியல் என்பது மக்களின் நியாயத்திற்கானதாக இல்லை.
தி.மு.கழகம் நீதியை நம்புகிற – எதிர்கொள்கிற இயக்கம். வாய்தா வாங்கி காலத்தை ஓட்டிய வரலாறு எங்களுக்கு கிடையாது. நேருக்கு நேராக எதிர்கொண்டு, பொய் வழக்குகளைப் பொடிப்பொடியாக்கியவர்கள். ஆனால், அ.தி.மு.க. என்பது ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கே அகில இந்திய அளவில் அவமானத்தைத் தேடித்தந்த இயக்கம்.
நீதித்துறை நடுவரிடம் உண்மையைச் சொன்ன பெண் தலைமைக் காவலர் உயிர் பயத்தில் இருப்பதையும், ஒரு காவலருக்கே போலீஸ்காரர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய அளவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் தமிழகம் இதுவரை கண்டதில்லை. அந்த அளவுக்கு கொலைகார அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழகம் சிக்கியிருக்கிறது. மக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் அவர்கள் கேட்கும் நியாயத்திற்கும் பதில் சொல்லத் திராணியின்றி, எங்கள் தலைவரை நோக்கிக் குரைக்க வேண்டாம். வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள் ராஜேந்திர பாலாஜி” என்று கூறியுள்ளார்.