கருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை போல் வடிவமைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். விழாவில்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் பலனிசாமி, “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா. பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார். இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை புரிந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் அவர்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி பார்த்தனர்.
இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படம் உள்ள டிஷர்ட்டுகளை போட்டபடி கருணாநிதி சமாதியில் கைகூப்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.