மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தென்காசி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர் சென்று வந்த இடங்கள், அவரது உணவகம், தொழில் செய்யும் அலுவலகம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.