“சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும்” – அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா நாளை தமிழகம் வருகிறார். முன்னதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து, தனியார் சொகுசு விடுதிக்கு சென்ற அவர் தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார்.இதற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ,சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சசிகலாவும் தினகரனும் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒருவேளை கலவரம் ஏற்பட்டால் அதற்கு அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார். கட்சிகள் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது தவறானது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும். சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என அனைவருக்கும் தெரியும். முதல்வர் கூறியது போல் அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் கட்சிக்கு வர வாய்ப்பே இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் , சசிகலா வருகையால் உங்களுக்கு அச்சமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா என வளர்க்கப்பட்டவர்கள். அந்த குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் நோக்கம் ” என்றார்.