“நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குக” – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

 

“நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குக” – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு சரியாக எழுதாததால் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் , “NEET -க்கு மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த T.சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக எனது மன வருத்தத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான், 14.09.2021 அன்று வெளியிட்ட, அறிக்கையின்படி, உடனே ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குங்கள் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களே, விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள் என்று உங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள். நான் நேற்றே கூறியதுபோல், மருத்துவர் தான் ஆக வேண்டும் என்று இல்லை.42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன.

“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு அவன் நேர்மையின் மறு பிறப்பு” என்ற பாடல் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன். மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.