உயிருக்கு ஆபத்து… z+ பாதுகாப்பு கோரும் சீரம் நிறுவன சிஇஓ!
நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசியின் தேவை அதிகரித்ததால் சீரம் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குவிந்தது. உள்மாவட்டங்களில் இருந்தும் தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்தன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சமயத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதிலிருந்து கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவல்லாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. பயந்து போன ஆதர் பூனவல்லா, பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டார். அதன் படி, சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆதர் பூனவல்லா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் z+ பாதுகாப்பு வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.