‘ட்வீட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு வதந்தி பரப்புகிறார்கள்’ கடுப்பான குஷ்பூ!
காங்கிரஸில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை, வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வரும் நடிகை குஷ்பூ, பாஜகவில் இணையவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் படத் திறப்பு விழாவுக்கு கூட தனக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கவில்லை என்றும் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறியது பேசுப்பொருளாக மாறியது.
அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், குஷ்பூ பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்ததால், குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளார் என அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமில்லாமல் இன்று அவர் திடீரென டெல்லி சென்றதும், இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த குஷ்பூ, காங்கிரசில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
ஒரு ட்வீட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேர்ப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தனது டெல்லி பயணம் இவ்வளவு பெரிதாக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அமைச்சர் அமித்ஷா நலம் பெற வாழ்த்து கூறியதற்காக இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.