“கந்த சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!

 

“கந்த சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில், கந்த சஷ்டி  குறித்து ஆபாசமாகப் பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேனலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து சாதி, மத, இன- மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக கருப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.

அது, அவனது சுதந்திரம்.

முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”.

இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

இறைவனை நம்பாதோர்க்கு,
“நம்பாமை” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

நம்பிக்கை கொண்டோர்க்கு,
“நம்புதல்” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2684384918444479&id=100006189913029

இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது…

இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.