பொய்யான தகவல் சொல்லி இ-பாஸ் பெற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை- தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னை தான் அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதி என்பதால், சென்னைவாசிகள் தென்மாவட்டங்களில் இருக்கும் சொந்த இடங்களை நோக்கி சென்ற வண்ணம் இருக்கின்றனர். அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் இ-பாஸ் காட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலியான காரணங்களை கூறி இ-பாஸ் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட எல்லையில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எல்லைக்கு வருபவர்களிடம் முறையான இ-பாஸ் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 49) என்பவர் மருத்துவ காரணங்களுக்காக தனது காருக்கு பாஸ் பெற்றுள்ளார். அதன் பின், தனது வாகனத்தில் கடந்த 5 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு 3 பேரை அழைத்து சென்றுள்ளார். அதே போல கடந்த 7 ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டு பேரை அழைத்து சென்றுள்ளார். அந்த இரண்டு முறையும் அவர் போலி பாஸ் மூலம் அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அமல்ராஜ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ பாஸ் பெற்று சென்றால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.