சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2019-20ம் ஆண்டில் 4.2 சதவிகிதமாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டும் இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டிலும் இரட்டிப்பாக 8.03 என்ற அளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இருப்பினும், 2016-17ம் ஆண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி 7.15 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.3 சதவிகிதமாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7, 6.1, 4.2 என குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டும் 2017-28ல் 8.59, 2018-29ல் 8.95, 2019-20ல் 8.3 சதவிகிதமாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து நிலையாக இருப்பதைக் காண முடிகிறது. நாடே பொருளாதார மந்த நிலையில் பாதிக்கப்பட்டாலும் தமிழ்நாடு தன்னுடைய நிலையை உறுதியாக பிடித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
தனிநபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தமிழ்நாடு இந்திய அளவில் 6வது இடத்தில் உள்ளது. இதுவே 2018-19ம் ஆண்டு 12வது இடத்தில் இருந்தது. ஒரே ஆண்டில் ஆறு இடங்கள் முன்னேறி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு அடிப்படையில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. விவசாயம், சேவை, உற்பத்தி ஆகிய மூன்று துறைகளின் சீரான வளர்ச்சி இதற்கு உதவியுள்ளது. இருப்பினும் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாக, 10.02 என இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் பதிவு செய்திருப்பது தமிழ்நாட்டில் சிறப்பான வகையில் ஆட்சி நடந்து வருவதை காட்டுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.