காதல் திருமணம் செய்த இளைஞரை கடத்தி சரமாரி அரிவாள் வெட்டு… பெண் வீட்டார் வெறிச்செயல்!

 

காதல் திருமணம் செய்த இளைஞரை கடத்தி சரமாரி அரிவாள் வெட்டு… பெண் வீட்டார் வெறிச்செயல்!

விழுப்புரம்

திருவெண்ணைநல்லூர் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் கடத்திச்சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கரடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையில் ஏழுமலை என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணிபுரிந்தார். அப்போது, அவரது மகள் நந்தினியுடன் காதல் ஏற்பட்டு, கடந்த மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, ஆறுமுகத்திடம் இருந்து நந்தினியை பிரித்த அவரது உறவினர்கள், திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆனைவாரியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருந்தனர்.

அங்கிருந்த நந்தினி, மீண்டும் கரடிப்பாக்கத்தில் உள்ள கணவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் சித்தப்பா பழனி, மாமா பார்த்திபன் உள்ளிட்ட 4 பேர், கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில், கரடிப்பாக்கத்திற்கு சென்று சமாதானம் பேசுவதாக கூறி ஆறுமுகத்தை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஆறுமுகத்தை கால்கள், தொடை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிய அவர்கள், திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள மலட்டாற்றின் கரையோரம் வீசி விட்டு தப்பியோடினர்.

காதல் திருமணம் செய்த இளைஞரை கடத்தி சரமாரி அரிவாள் வெட்டு… பெண் வீட்டார் வெறிச்செயல்!

நீண்ட நேரமாகியும் கணவர் திரும்பாததால் சந்தேகமடைந்த நந்தினி அதிகாலை 4.30 மணியளவில் திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்தில் கணவரை மீட்டுத்தரும்படி கோரி அழுதுள்ளார். இதனை அடுத்து, உடனடியாக விசாரணையை துவக்கிய போலீசார் மலட்டாற்றின் கரையோரத்தில் வீசப்பட்ட ஆறுமுகத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஶ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், நந்தியின் சித்தப்பா பழனியின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த எண் சேலம் மாவட்டம் மேலசேரியில் பயன்பாட்டில் இருப்பது தெரியவரவே, அங்கு விரைந்து சென்ற போலீசார் பழனி, பார்த்திபன் உள்ளிட்ட 4 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.