வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆவின் நிறுவனம் வாய்ப்பு!

 

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆவின் நிறுவனம் வாய்ப்பு!

கொரோனா முடக்கத்தால் எந்த ஒரு நிவாரண உதவியும் கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்கள் இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வில்லை. மேலும் அரசிடமிருந்து சிறப்பு உதவிகளும் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டோர் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களை ”நடமாடும் பால்வண்டி முகவர்களாக” ஆவின் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் மாதமொன்றுக்கு ரூ.15,000 வரை வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் மாண்புமிகு தமிழநாடு முதல்மைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்பு தொகை ரூ.10,000/- இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆவின் நிறுவனம் வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்பு தொகையாக செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம். சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (விற்பனை) அவர்களிடம் வைப்பு தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்பினை பயன்படுத்திகொள்ள அனைவரும் வருக வருக” என குறிப்பிடப்பட்டுள்ளது.