பிடிக்க முயன்ற காவலரை தலையில் வெட்டிய குற்றவாளி

 

பிடிக்க முயன்ற காவலரை தலையில் வெட்டிய குற்றவாளி

குற்றவாளியை பிடிக்க முயன்ற காவலரை தலையில் வெட்டிய நபர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

திருச்சி பாலக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் நாகாவே பிரிட்ஜ் எதிர்ப்புறம் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் முதல்நிலை காவலர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தொடர் குற்றச் சம்பவங்கள் கொண்ட விஜய் எனும் நபர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவலர் வேல்முருகன், விஜயினுடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி, விஜயின் சட்டையை பிடித்து கீழே இறக்க முயற்சி செய்தார். அப்போது பின்னே அமர்ந்திருந்த விஜயின் நண்பர்களான யுவராஜ், பாண்டியன் இருவரில் யுவராஜ் திடீரென கத்தியால் காவலர் வேலுமுருகனின் தலையில் வெட்டி கீழே தள்ளிவிட்டு மூன்று பேரும் சென்றனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காவலர் வேல்முருகனை சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிடிக்க முயன்ற காவலரை தலையில் வெட்டிய குற்றவாளி

இதனையெடுத்து காவலரை வெட்டி தப்பி ஓடிய மூன்று பேரையும் பிடிக்க கோட்டை காவல் உதவி ஆணையர் ரவி அபிராம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த பாண்டியன், விஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2இல் சரணடைந்தார். பின்னர் நீதிபதி உத்தரவின் படி யுவராஜை லால்குடி கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.