‘மாமியாரின் தகாத உறவை’ தட்டிக் கேட்ட மருமகன் கொலை : பொள்ளாச்சி அருகே பயங்கரம்!
பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளை புதூரைச் சேர்ந்தவர் ராணி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது மகள் பூங்கொடியுடன் வசித்து வந்திருக்கிறார். பூங்கொடிக்கு அண்மையில் துரை என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே, ராணி அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு தான் இது பூங்கொடிக்கு தெரிய வந்திருக்கிறது. ராணியை துரையும் பூங்கொடியும் கண்டித்ததால், தண்டபாணிக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ராணியுடன் தண்டபாணி தனிமையில் இருந்ததை பூங்கொடியும் துரையும் பார்த்துள்ளனர். இதையறிந்த தண்டபாணிக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த தண்டபாணி, துரை மற்றும் பூங்கொடியை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த துரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பூங்கொடி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற தண்டபாணியை கைது செய்த போலீசார், அவரை உடுமலை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், ராணியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.