“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்
வாழ்க்கையில் குடும்பமும், வேலையும் முக்கியம்.குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறோம்.உழைப்பதால்தான் குடும்பச் சக்கரம் சுழல்கிறது.ஆனால் குடும்பம் வேற..வேலை வேற. இது தெரியாமல் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வீண் டென்ஷனாகிறார்களாம். உலகப் புகழ் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இதனைச் சொல்லியிருக்கிறது.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசிய அளவில் வேலையின் போது எரிச்சல் அடைவோர் விகிதம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இந்த ஆய்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்தியப் பணியாளர்கள் தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பிரித்து கையாளத் தெரியாத காரணத்தை இதில் கண்டு பிடித்திருக்கிறர்கள்., மேலும் சமீபத்தைய கரோனா பாதிப்பு, பொதுமுடக்கம் காரணமாகவும், எரிச்சலடைவது அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் 19 சதவீத தொழிலாளர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பதும், அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 28 சதவீதம் பேர் தங்களால் இயல்பாகவே நிர்வகிக்க முடியாத பணிச்சுமை மற்றும் அல்லது அதிகப்படியான வேலை நேரம், 34 சதவீதம் பேர் வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வேலைக்குப் போனால் வேலையை இஷ்டப்பட்டு, மகிழ்ச்சிகரமாகச் செய்ய வேண்டும். வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைக்கவோ விவாதிக்கவோ
கூடாது. அதே போல் வீட்டிற்கு வந்தால் வேலையையும், மேலதிகாரியையும் நினைக்காமல் மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தத்தால் நீங்கள் எப்போது யாரிடம் சொல்லிக் கொண்டு போவீர்கள்?” எனத் தெரியாது என எச்சரித்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம்.
“டாப் தமிழ் நியூஸ்” செய்திகளுக்காக இர.சுபாஸ் சந்திர போஸ்.