லடாக் போகிறேன்… கம்மி விலையில் ராணுவ பைக் என்று தூண்டில்! – ஏமாற வேண்டாம் என்று போலீஸ் எச்சரிக்கை
ஆன்லைனில் லடாக் போகிறேன் அதனால் என்னிடம் உள்ள ராணுவ பைக்கை குறைந்த விலைக்கு விற்க உள்ளேன் என்று வரும் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என்று திருநெல்வேலி போலீஸ் எச்சரக்கைவிடுத்துள்ளது.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ராணுவ பைக் ஒன்று விற்பனை செய்வதாக ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் வந்தது. இதை நம்பி முன்பணம் செலுத்தி பலரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் முழுதுவதும் திருடப்பட்டது. பைக் விற்பனை செய்வதாக கூறிய வட இந்திய நபரை போலீசார் தேடிவந்தனர்.
தற்போது திருநெல்வேலியில் இதுபோன்ற விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாக உள்ளது. அதில், “இந்திய ராணுவ வீரர் நான், தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கிறேன். லடாக் பிரச்னை காரணமாக எல்லை நோக்கி செல்ல உத்தரவு வந்துள்ளது. அதனால் இங்கிருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு லடாக் செல்ல உள்ளேன். என்னிடம் ஒரு ராணுவ பைக் உள்ளது. அதை அங்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் விற்பனை செய்ய உள்ளேன்” என்று பைக்கின் படத்துடன் விளம்பரம் உள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பொது மக்களுக்கு எச்சரக்கைவிடுத்துள்ளார். அதில், “ஆன்லைன் மூலம் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதாக முன்பணத்தை வாங்கி ஏமாற்றும் கும்பல் தற்போது பொது மக்களைத் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளனர். எனவே, பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நேரில் பார்த்து சான்றிதழ் சரிபார்த்து வாங்கும் வாகனங்களே பலமுறை ஏமாற்றத்தில் முடிகிறது. இதுபோன்று பல புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். அதனால், ஆன்லைனில் வாகனத்தை வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.
உஷார்! மோசடியில் இது புதுசு. குறைந்தவிலை ராணுவ பைக் மோசடி. எல்லை பிரட்சனையை கூறி உடனே அங்கு செல்வதால் புதிய பைக்கை பாதி விலைக்கு தருவதாக ஆன்லைன் விளம்பரம் செய்து முன்பணம் வாங்கி ஏமாற்றும் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். கவனம் தேவை. @CityTirunelveli pic.twitter.com/AAppWad7th
— Arjun Saravanan (@ArjunSaravanan5) June 22, 2020
நம் தேசப்பற்றையும் ராணுவ வீரர்கள் மீதான பெரும் மதிப்பையும் சிலர் மோசடிக்கு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. பொது மக்கள் இந்த மோசடிக்கு இடம் கொடுக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.