இ-பாஸ் கிடைக்காததால்… தமிழக-கேரள எல்லையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!

 

இ-பாஸ் கிடைக்காததால்… தமிழக-கேரள எல்லையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்குள்ளே நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் வீட்டார் முன்னிலையில் கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ நடந்து வரும் நிலையில், வேறு மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடிகளின் திருமணத்தில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. அதே போல தான் இந்த ஜோடிக்கும் நடந்துள்ளது.

இ-பாஸ் கிடைக்காததால்… தமிழக-கேரள எல்லையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!

கேரளாவின் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவுக்கும் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சனுக்கும் கடந்த மார்ச் 22 ஆம் தேதியே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கால் ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வைரஸின் தீவிரம் இப்போது வரை குறையாமல் இருப்பதால் ஊரடங்கு இன்னும் அமலில் இருக்கிறது. அதனால் மற்ற மாநிலங்களுக்கு செல்ல நினைப்பவர்கள் பாஸ் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மணமகள் பிரியங்காவுக்கு கோவை செல்வதற்கு பாஸ் கிடைத்து விட்ட நிலையில், இடுக்கிக்கு செல்ல ரோபின்சனுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடிக்க எண்ணிய பெற்றோர்கள் இரு மாநில எல்லையிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன் படி, தமிழக கேரள எல்லையில் பாய் விரித்து சடங்குகள் செய்து கேரள போலீஸார், சுங்கத்துறையினர், சுகாதாரத்துறையினர், வனத்துறையினர் முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு மணமகள், மணமகனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.