வேடச்சந்தூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் செந்தில் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மகன் தீபக்(9). அங்குள்ள அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கால் வீட்டில் இருந்து வந்த தீபக், இன்று காலை அங்குள்ள குளத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, குளத்தில் மணல் அள்ளியதால் உருவான பள்ளத்தில் சிறுவர்கள் நண்டு பிடித்துள்ளனர். இதனை பார்த்த தீபக்கும், அவர்களுடன் சேர்ந்து நண்டு பிடித்துத்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய தீபக் நீரில் மூழ்கினார். இதனால் சிறுவர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று குளத்தில் இறங்கி தேடினர். அப்போது, மயங்கிய நிலையில் சிறுவனை மீட்ட அவர்கள், வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.
தகவல் அறிந்த எரியோடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.