ராஜபாளையத்தில் தம்பதியை கட்டிப்போட்டு 80 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை!

 

ராஜபாளையத்தில் தம்பதியை கட்டிப்போட்டு 80 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை!

விருதுநகர்

ராஜபாளையத்தில் தம்பதியினரை கட்டிப்போடு விட்டு, வீட்டில் இருந்த 80 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் நாராயண ராஜா (61). இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உரக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜமுனா (55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தம்பதியினர் வீட்டில் தனியே வசித்து வருவதை அறிந்த 5 பேர் கும்பல், நேற்று முன்தினம் நள்ளிரவில் நாராயண ராஜாவின் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர், தம்பதியினர் இருவரையும் கத்திமுனையில் கட்டிப்போட்ட அந்த கும்பல், பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்றது.

ராஜபாளையத்தில் தம்பதியை கட்டிப்போட்டு 80 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் கொள்ளை!

நாராயணராஜாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று, தம்பதியினர் இருவரையும் மீட்டனர். பின்னர், இதுகுறித்து தகவலின் பேரில், ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், விருதுநகரில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.