சிறுநீரக கல் பிரச்னையின் 8 அறிகுறிகள் அறிவோம்!

 

சிறுநீரக கல் பிரச்னையின் 8 அறிகுறிகள் அறிவோம்!

சிறுநீரகத்தில் கால்சியம் அல்லது யூரிக் அமிலம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் படிவதன் காரணமாக சிறுநீரகக் கல் ஏற்படுகிறது. இது சிறுநீரகத்தின் எந்த பகுதியிலும் ஏற்படலாம். இது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்லும் பாதையில் தடையை ஏற்படுத்தும்போது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்துகிறது. சிறுநீரக கல் பிரச்னையின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வோம்.

சிறுநீரக கல் பிரச்னையின் 8 அறிகுறிகள் அறிவோம்!

1) முதுகு – பக்கவாட்டு வலி

நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தாங்க முடியாத வலியை சிறுநீரக கல் ஏற்படுத்தும். வயிறு, முதுகு, பக்கவாட்டில் வலி இருக்கும். சிறுநீரக கல் சிறுநீரகத்திலிருந்த வரைக்கும் பெரிய அறிகுறியை ஏற்படுத்துவது இல்லை. அது சிறுநீர்க் குழாயில் விழும்போதுதான் வலியை ஏற்படுத்தும். எனவே, தாங்க முடியாத வலி திடீரென்று ஏற்படும். கல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து வலியின் தீவிரம் மாறுபடும். வலி அலை அடிப்பது போல வந்துகொண்டே இருக்கும். இந்த அலை போன்ற வலி ஒரு நிமிடம் வரை நீடித்து மறையும். பிறகு மீண்டும் வரும். முதுகின் நெஞ்செலும்புக் கூட்டுக்கு கீழ், வயிறு, பக்கவாட்டில் வலி ஏற்படுகிறது என்றால் அது சிறுநீரக கல் பிரச்னையாக இருக்கலாம்.

2) சிறுநீர் கழிக்கும்போது வலி

சிறுநீரக கல் சிறுநீர்ப்பைக்கு வந்துவிட்டால் சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். இந்த வலி கூர்மையாக குத்துவது போலவோ, பற்றி எரிவது போலவோ இருக்கும். சிறுநீரக கல் பிரச்னை இன்றி சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் கூட இந்த வலி ஏற்படும்.

3) அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு கழிப்பறைக்கு செல்வது சிறுநீரக கல் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

4) சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் சிவப்பாக வரும். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுகிறது என்பதன் அடையாளம் இதுவாகும். சிறுநீர் சிவப்பு, பிங்க், பிரவுன் நிறத்திலிருந்தால் உடனடியாக சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

5. சிறுநீர் கலங்கலாக, துர்நாற்றத்துடன் இருந்தால் அதுவும் கூட சிறுநீரக கல் அல்லது சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிக எளிதாக சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6. சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படும்போது சிறுநீர் மிகக் குறைவாக வரும். சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

7. வாந்தி அல்லது குமட்டல்

சிறுநீரக கல் பிரச்னை வந்தால் அவர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் பிரச்னை ஏற்படும். சிறுநீரகம் மற்றும் உணவு செரிமான மண்டலத்தை ஒரே நரம்பு பாதை வழியாகவே மூளை கட்டுப்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு வரும்போது அது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

8. காய்ச்சல்

பாரும் காய்ச்சலை நோய் என்று கருதுகின்றனர். அது வெறும் அறிகுறிதான். சிறுநீரக கல் பிரச்னை வந்தால் அவர்களுக்கு காய்ச்சல் அடிக்கும் அல்லது உடல் சில்லிட்டுப்போகும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.