7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை… அரசு ஊழியர் போக்சோவில் கைது…
சிவகங்கை
காரைக்குடியில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த அரசு ஊழியர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(40). இவர் மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பாலாஜி தனது வீட்டின் அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியிடம், பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவர் பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை காணாததால் தேடிச்சென்ற அவரது பெற்றோர் அவருக்கு நடந்த கொடுமையை கண்டு பாலாஜியை சராமாரியாக தாக்கி, வீட்டில் வைத்து பூட்டினர். தொடர்ந்து, இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலாஜியை மீட்டு, காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதால், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.