அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : குற்றவாளி மீது மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று முன்தினம் அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பூ வியாபரியான 27 வயதான ராஜேஷ் என்கிற ராஜா, சிறுமிக்குத் தினமும் தின் பண்டங்கள் வாங்கி தந்து பழக்கப்படுத்தி அதன் மூலம் சிறுமியிடம் பழகி வந்திருக்கிறார். காரணம் சிறுமியின் தாய் சற்று மனநலம் பாதிக்கபட்ட நிலையில் தந்தை நாகூரான் கூலி தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இதனால் சிறுமியை சரிவர கவனிக்க ஆள் இல்லாததை சாதமாக்கி கொண்ட ராஜா சம்பவத்தன்று சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி அலறி துடிக்க, அங்கிருந்த கருவேல மரக்கட்டையை எடுத்து சிறுமி தலையில் அடித்து கொன்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கண்டன குரலை பதிவு செய்தனர்.
இதனிடையே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்த 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், வன்கொடுமை தடுப்புச் சட்ட உதவித்தொகை 4,12,500 ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார்.
இந்நிலையில் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை, கொலை சம்பவத்தில் கைதான ராஜா என்பவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை இல்லாததே இதுபோன்ற தொடர் குற்ற சம்பவங்களுக்கு காரணம் என பலரும் ஆதங்கத்துடன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.