வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது!
திருப்பத்தூர்
வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 2,300 லிட்டர் சாராய ஊறல்களை அழித்த போலீசார், மேலும் சாராயம் விற்ற 5 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியாம்பாடி அருகேயுள்ள தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை கடந்தி வந்து விற்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி. விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா பகுதியில் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது ஆந்திர எல்லையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 2,300 லிட்டர் சாராய ஊறல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய நபர்களை பிடிக்க முயன்றபோது, போலீசாரிடம் இருந்து தப்பியோடினர்.
தொடர்ந்து, வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான கொடையாஞ்சி, தும்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ஆஞ்சியம்மாள், கோவிந்தம்மாள், அம்பிகா உள்ளிட்ட 5 பெண்கள் மற்றும் 2 ஆண்களை கைது செய்தனர்.