7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதத்தை வைத்து நாடகம் ஆடிய மத்திய அரசு: நடந்தது என்ன?

 

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதத்தை வைத்து நாடகம் ஆடிய மத்திய அரசு: நடந்தது என்ன?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை அவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறை அமைச்சகமே நிராகரித்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை அவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறை அமைச்சகமே நிராகரித்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.

இரண்டு ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி என்று குறிப்பிட்டு கடந்த 2018 ஏப்ரல் 18-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்தில், “முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் பரிந்துரை கடிதத்தை நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

rti

இந்நிலையில், தண்டனைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எதன் அடிப்படையில் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு, 7 பேரின் விடுதலை தொடர்பாக தங்களுக்கு எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை என்று குடியரசு தலைவர் மாளிகை பதில் அனுப்பியுள்ளது.

மேலும், தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை என்றும், உயர்மட்ட அதிகாரியால் 7 பேரின் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.