60 பைசா டாக்டர் கொரோனாவால் மரணம்; கதறி அழுத மக்கள்
60 பைசா டாக்டர் என்று சொன்னால் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் எல்லோருக்கும் தெரியும் அளவிற்கு மக்கள் மருத்துவராக இருந்தவர் பார்த்தசாரதி(84). கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் ஏழை ,எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார் பார்த்தசாரதி.
அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் சென்று மருத்துவம் படித்து வந்த பார்த்தசாரதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தனது இல்லத்திலேயே சிறிய அளவிலான இடத்தில் மருத்துவமனையைத் தொடங்கினார்.
ஏழை எளியவர்களுக்கு வசதியாக ஆரம்ப காலத்தில் அவர் நிர்ணயித்த மருத்துவக் கட்டணம் தான் 60 பைசா. அதனாலேயே அவர் 60 பைசா டாக்டர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். நாளடைவில் கால மாற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தினாலும் மற்ற மருத்துவர்கள் போல் இவர் பெரிய அளவில் கட்டணம் எதுவும் வாங்கியதில்லை. சொற்ப கட்டணத்திலேதான் மருத்துவ சேவை செய்து வந்தார். அதிலும் பணம் இல்லாதவர்களுக்கு எதையும் கேட்காமல் மருத்துவம் செய்து வந்தார். பள்ளி சீருடையில் செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்து வந்தார்.
அப்படிப்பட்ட மருத்துவ மக்கள் மருத்துவரான பார்த்தசாரதிக்கு கடந்த வாரம் திடீரென ஒரு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே தனிமையில் இருந்து வந்தார். தனிமையில் இருந்து வந்த அவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததை அடுத்து காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது அப்பகுதி மக்கள் ஓடி வந்து கதறி அழுதனர்.
இதையடுத்து மக்கள் மருத்துவரின் உடல் காசிமேடு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு விட்டது.