600 கி.மீ. பயணம்! ஹெலிகாப்டர் கேட்ட கவர்னர்….. பதில் சொல்லாத மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

 

600 கி.மீ. பயணம்! ஹெலிகாப்டர் கேட்ட கவர்னர்….. பதில் சொல்லாத மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

600 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யும்படி மேற்குவங்க கவர்னர் விடுத்த கோரிக்கையை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டு கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கருக்கும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இருவருக்கும் இடையே பல கருத்து மோதல்கள் நிலவுகிறது. இந்நிலையில் பராக்கா நகருக்கு செல்ல ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யும்படி மாநில தலைமை செயலருக்கு கோரிக்கை விடுத்து இருந்தார் கவர்னர் ஜகதீப் தங்கர். ஆனால் மேற்குவங்க அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

ஹெலிகாப்டர்

இதனையடுத்து, நேற்று மாலை கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், பராக்காவில் நாளை (இன்று) நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் மற்றும் மாநிலத்தின் முதல் பெண்மணியும் காரில் 600 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விவகாரத்தில் மாநில தலைமை செயலளர் அல்லது முதல்வர் மம்தா பானர்ஜியும் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என கவர்னர் ஜகதீப் தங்கர் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

இதற்கிடையே நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவர்னரை தாக்கி பேசினார்.  மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தியதில் அம்மாநில கவர்னரின் பங்கு குறித்து மம்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியலமைப்பு பதவி குறித்து நான் கருத்து கூற மாட்டேன். ஆனால் சிலர் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர். என்னுடைய மாநிலத்திலும் அதுதான் நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்தாலே தெரியும், இணக்கான நிர்வாகத்தை நடத்த அவர்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.