இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், மூதாட்டி பலி!

 

இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், மூதாட்டி பலி!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், கணவர் கண் முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள வடக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி மாரிக்கண்ணு (61). தம்பதியினர் இருவரும் நேற்று, தொண்டி அடுத்த நம்புதாளை பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வடக்கூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது முத்தையாவின் வாகனம் மீது, எதிரே வந்த அரசுப்பேருந்து அதிவேகமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்தையா பலத்த காயமடைந்தார்.

இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில், மூதாட்டி பலி!

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த பகுதிமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். தொடர்ந்து, மாரிக்கண்ணுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.