துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை
மதுரை
மதுரையில் துணிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மூன்றுமாவடி பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், முத்துக்குமார் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து இன்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதனுள் இருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.