சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி!

 

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி!

விருதுநகர்

சாத்தூர் அருகே வைப்பாற்றில் குளித்த 6 வயது சிறுவன் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த காமாட்சி நாயக்கர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுபாண்டி (47). கூலி தொழிலாளி. இவருக்கு அழகன் (13), தினேஷ் (8), திலீபன் (6) ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று சிறுவர்கள் மூவரும் வீட்டின் அருகில் இருக்கும் வைப்பாற்றுக்கு குளிக்க சென்று உள்ளனர்.

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி!

மூவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திலீபன் ஆழமான பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி மூழ்கினான். இதனை பார்த்து அழகனும், தினேஷும் கூச்சலிடவே, சத்தம் கேட்டு அந்த பகுதி வாசிகள் ஆற்றில் இறங்கி சிறுவனை தேடினர். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவனை மீட்க முடியாததால், இது குறித்து சாத்தூர் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதி மக்கள் உதவியுடன், சேற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் திலீபனின் உடலை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.